Skip to main content

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!


சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள்.

யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.
    - ஆசிரியர் குறிப்பு

#சம்பந்தர்கடை_என்_நினைவில்
By கரவெட்டி ராஜி

கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை.

நாலு றோட்டு சந்திக்கும் இடம் மட்டுமல்ல,  அங்கிருப்பவர்களுடன் உணர்வாக கலந்து , உயிராகி விட்ட இடம் தான் சம்மந்தர்கடை.

துணி முதல் தும்புதடி வரை கிடைக்கும் ஒரே இடம். சங்ககடையில் சீத்தைதுணி முதல் சீரகம் வரை எல்லாமே வாங்கிடலாம்.
பக்கத்தில் இராசனாயகப்பா பெரும் கடை முதலாளி. அக்கம் பக்கம் உள்ளோர் கடன்கொப்பி வைத்து மாதம் ஒருமுறை  பணம் செலுத்தி பொருட்களை வாங்கிடுவர். அங்குள்ளவர்கள் மீது அவர் கொண்டுள்ள  நம்பிக்கை தான் காரணமோ.
பக்கத்தில் ஒரு நகைக்கடையும் இருந்தது. எங்கள் பெண்களின் சிறு சேமிப்பு தோடாகவோ, மூக்குத்தியாகவோ அவர்களை அழகுபடுத்திவிடும்.

கரவெட்டி ஆண்கள் அன்றைய கமல் ஆகவும், ரஜனியாகவும் இருந்ததற்கு காரணமே அங்குள்ள முடிதிருத்தகம் ஒன்று இருந்தது தான் காரணம் என்றால் மறுக்க தான் முடியுமா.  

உடைகளை துவைத்து, அயன் செய்து தந்து பாடசாலை யில் சிட்டாக நாமும் சிறகடித்ததற்கு, அங்கிருந்த லோன்றியும்  முழு  முதற்காரணம் தான்.
 
சிறுபெட்டி வியாபாரிகள், ஏன் பெரிய மரக்கறி கடையும் கூடவே இருந்தது.

சம்மந்தர்கடையில் காலை ஒரு ஆறு, ஆறரையிலிருந்து ஏழு எழரைவரைக்கும் இடியப்பம் முதல் தோசை, வெள்ளையப்பம், பாலப்பம் விற்பார்கள். கொஞ்ச நேரம் பிந்தினால் வீட்டில அடுப்பு மூட்ட வேண்டும். அந்த செல்லாச்சி மாமியின் வெள்ளையப்பத்தை நினைத்தால், இன்றளவும் அப்படி ஒரு அப்பம் நானும் சாப்பிட்டதில்லை. அந்த தோசையில் சம்பல் ஊறி, அம்மம்மா இப்ப நினைத்தாலும் மனம் தவிக்கிறது. உள்ளுக்குள் மூச்சுமுட்டுகிறது

 ஒன்பது, பத்துமணிக்கெல்லாம் மீன் சந்தை தொடங்கிவிடும். அதை வாங்க பெண்கள் வீட்டில் போட்டிருந்த மைக்சியோட வாடி மீனாட்சி, வாடி சரசி மீன் வாங்கி வருவம் என்று, அவர்களுக்கும் ஊர் கதை பேச அப்ப தான் நேரம் கிடைக்கும் போல. எடியே அக்காத்தை சின்னாச்சி அக்காத்தை வீட்டை நேற்று இரவு ஒரே சத்தமாக இருந்தது நீ ஏதாச்சும் அறிஞ்சனியே. ஒவ்வொரு நாளும் தான் அங்கை இடியுடன் கூடிய மழை.  இப்படி பல  கிசு கிசுகதைகளை அம்மாவின் சேலை தலைப்பை கடித்தபடி நானும் அப்பாவியாக, அடப்பாவியாக இருந்து கேட்டதுண்டு.  போற போக்கில பூவரசம் இலையை பிடுங்கி சூடைமீனை அதில் வாங்கி வரத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.

 பின்னேரத்தில் சில வேளை ஐஸ்பழ சைக்கிள் நிற்கும். பனம்பழக்காலங்களில் அம்மாபேத்தி பனங்காய்காய் விற்பார் . இருபதைந்து சதத்திற்கு ஐந்து தருவார்.  அந்த சுவை இன்றளவும் என் நாக்கில். அந்த இருபத்தைந்து சதத்திற்கு வசதி இருந்ததில்லை அன்று. நாவற்பழக்காலங்களில் நாவற்பழம் பின்னேரங்களில் ஆச்சி ஒருவர் விற்பார்.   வீட்டில் அம்மா மல்லி பேணியில் மறைவாக வைத்ததை நாங்களும் பல நாளாக மறைந்து, காத்திருந்து எடுத்து கொண்டு சென்று வாங்கி நண்பர்களுக்கு காட்டி காட்டி உண்பதில் இருக்கும் சுகமிருக்கே அப்பப்பா எங்கு போனாலும் கிடைத்திடாது.

 மாலையில் கரவெட்டி ஆண்கள் சேர்ந்து நாட்டு பிரச்சினை, ஏன் வீட்டு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து  எந்த வித தீர்மானமும் நிறைவேற்றப்படாத ஐநா சபை கூடும் இடமும் இதே சம்பந்தர் கடை தான்.

சில வாலிபர்கள் கூட்டமாக நின்று அந்த வழி போய், வரும் பெண்களுக்கு கடலை போடும் இடமும் சம்மந்தர்கடை தான்.
  
கோயிலுக்கு வரும் காவடி எல்லாம் சமா வைத்து, ஊரையே கூட்டி, வேடிக்கை காட்டிடுவர் அந்த சந்தியில் தான்.

 நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்காவது விளையாடிக் கொண்டு இருப்போம், பறைச்சத்தம் கேட்டால் பறந்தோடி வந்து பிணத்தை ஒருமுறை பார்த்திடுவோம்.
இறந்த உடலுக்கு ஊரே கூடி அஞ்சலி செலுத்தும் பிரதான இடமும் நம்ம சம்மந்தர் கடை தான்.

 விலாசம் சொல்லும் போது இலகுவாக சொல்ல அடிக்கடி நாங்கள் எல்லோரும் பயன்படுத்தும் ஒரே சொல் சம்மந்தர்கடை. 

எங்கள் எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாத, மறந்து விட முடியாத நிஜமான பல நினைவுகளை நம்மில் அடக்கி வைத்திருக்கிறதென்றால் மிகையாகாது.  

உன் அழகில் இன்று வரை பெரிதாக எந்த மாற்றமும் இருந்ததில்லை. கடைகளில் சில மாறினாலும் என் நினைவில் பல காட்சிகளை படமாக்கும் ஒரே இடம் . 

வெளியூர் போய் வரும் ஒவ்வொரு முறையும் சம்மந்தர்கடையடியில் சம்மந்தப்பட்டவர்களை எம் மனம் தேடி ஏங்கும்.  பல முறை ஏக்கமாகவே தான் இருந்திருக்கிறது. அன்றிருந்த மாதிரி கூடி கதை பேச  உறவுகள் இல்லையோ. மனம் பதைபதைக்கிறது. பக்கத்தில் இருந்தும் பாரா முகமாகி தொலைபேசி களில் தூரதேசம் பேசி துக்கத்திற்கு கூட  துணையாக இருந்து பார்த்திட யாரும் இல்லாத பாவியாகிவிட்டோமோ.

என்னமோ போ எப்படியோ போ. காலங்கள் மாறினாலும் , கதிரவன் உதிக்கும் திசை மாறுவதில்லை. எங்கள் நினைவில் சம்மந்தர்கடை , கடைகள் நிறைந்த இடம் மட்டுமல்ல வாழ்வோடு ஒன்றிப்போன இடம். ஒரு நாளைக்கு பல முறை தரிசிக்கும் கரவெட்டி ஷொப்பிங் மால் எல்லோர் நினைவிலும் 
சொர்க்கம் தான்.

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...

ஷம்போக்கு பதிலா இதை தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்! பெண்களே உஷார்

எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு தலைமுடி வளர்ச்சியை தூண்டலாம். பயன்கள் சரும அழகைப் போலவே தலைமுடி பராமரிப்பிலும் கடலைமாவு பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது. இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது. முடி வளர்ச்சி முடி உதிர்தலை தடுத்தல் கூந்தலை சுத்தமாக்குதல் கூந்தல் வறட்சியை போக்குதல் கூந்தலிலுள்ள சிக்கலை போக்குதல் இயற்கையான கண்டிஷனர் பொடுகை தவிர்த்தல் பொலிவான மற்றும் நீண்ட கூந்தலை அளித்தல் கூந்தல் நுனிப்பிளவை தடுத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு கடலை மாவு மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.