நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கண்டுபிடிப்பு; மம்மிக்களுடன் கூடிய 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு!
எகிப்தில், கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகப் பழமையான மம்மிக்களுடன் கூடிய மரத்தாலான சவப்பெட்டிகளை உள்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எகிப்தின் தெற்கே உள்ள லக்சர் நகரின் அல் அசாசிப் கல்லறையில், அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட போதே இவற்றை கண்டுபிடித்துள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.
மேலும், குறித்த அகழ்வாராய்ச்சியின் போது 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வர்ணம் பூசப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட அந்த சவப்பெட்டிகளுக்குள் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளின் மம்மிக்கள் துணியால் நன்கு சுற்றப்பட்டுக் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களாக இருக்கலாம் என்று அந்நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.