சனி பகவான் என்றாலே பயம்தான். சனி பிடித்துக்கொள்வாரோ என்று பயந்து முன்னதாகவே பரிகாரம் செய்வார்கள்.
கயிலாய நாதன் சிவபெருமானை அந்த சனிபகவான் பிடித்த கதை தெரியுமா?
தவறு செய்தவர்களை மட்டுமே தண்டிப்பார் சனிபகவான். முன்ஜென்ம வினைக்கேற்ப இந்த பிறவியில் ஒருவரின் ராசிக்கட்டத்தில் அமர்கிறார் சனிபகவான்.
ஏழரைச் சனி ஒருவருடைய வாழ்வில் முதல்முறை வரும் போது அவர் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் இருப்பார்.
அச்சமயத்தில் படிப்பில் கவனம் குறையும். பரீட்சை ஹாலுக்குள் போனதும் படித்தது மறந்து போகும். சோம்பல் வரும். எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.
சனி சிவனைப் பிடித்த கதை
சனி பகவான் புதிதாக கர்மகாரகனாக பதவி ஏற்றிருந்த காலம். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மன்னன், மக்கள், முனிவர்கள், தேவர்கள், சாமானியர்கள் என்று பேத பாவமில்லாமல், சனிபகவான் அவரவர்கள் கர்மத்துக்கேற்ப அவர்களை துவைத்து (கஷ்டம்) பிழிந்து கொண்டிருந்தார்.
திடீரென்று ஏற்பட்ட இந்த துன்பத்தை முனிவர்கள், தேவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சனி மீது மிகுந்த கோபம் கொண்டார்கள்.
இதற்கு என்ன வழி பரிகாரம் என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தார்கள். கடைசியில் சிவன்தானே இவருக்கு வரம் கொடுத்து, பதவி கொடுத்தவர் எனவே, அவரிடமே சென்று இதை தடுத்து நிறுத்தச் சொல்வோம் என்று கோபத்துடன் சிவனை காண புறப்பட்டனர்.
முனிவர்கள் கோபத்துடன் வருவதை கண்ட நந்திபகவான், சிவனிடம் இவர்கள் கோபத்துடன் வந்து கொண்டிருப்பதைப் பற்றிய தகவலை சொன்னார்.
இதன் விபரத்தை புரிந்துகொண்ட அவர் உடனே சனியை வரவழைத்தார். சனியும் வந்தார். அவரிடம் சிவன் தன்னை இரண்டரை நாழிகை பிடித்துக்கொள்ளுமாறு கூறினார்.
சனி தயங்கினார். “உலகிற்கே படியளப்பது தாங்கள். உங்களை எப்படி நான் பிடித்துக்கொள்வது” என்றார். “இப்பொழுது விவாதிப்பதற்கு நேரமில்லை. சொல்வதை செய்” என்றார் சிவன்.
சனியும் சிவனை பிடித்துக்கொண்டார். அப்பொழுது சரியாக முனிவர்களும், தேவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். சிவனை சனி பிடித்ததையும் கண்டனர்.
அவர் பிடித்த சில நொடிகளிலேயே, சிவனுக்கும் பார்வதிக்கும் சண்டை மூண்டது. பார்வதி சிவனை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார்.
இதைப்பார்த்த முனிவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். சிவனும், அவர்களைப் பார்த்து “என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்” என்று கேட்கிறார். “ஒன்றுமில்லை இறைவா, உங்கள் தரிசனத்திற்காக வந்தோம். பார்த்துவிட்டோம். புறப்படுகிறோம்”. என்று சென்றுவிட்டனர். நேரம் முடிந்தவுடன் சனி சிவனை விட்டுவிடுகிறார்.
பிறகு, சிவனிடம் "ஏன் இப்படி செய்தீர்கள்"என்று சனி கேட்டார். சிவன்,"அவர்கள் எல்லாம் உன் மீது குற்றம் கூறவந்தார்கள். நீ என்னையே பிடித்ததை பார்த்ததும், சிவனையே சனி பிடித்ததென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம் என்று ஒன்றுமே கேட்காமல் சென்று விட்டனர்.
அவர்களை பயமுறுத்த இதை செய்யவில்லை. கர்மபலன்களை அனுபவிப்பதில் அனைவரும் சமம் என்று உலகம் உணரவே இப்படி செய்தேன்" என்றார்.
சனி சிவனைப் பிடித்த மற்றொரு கதை
சனிபகவான் தேவலோகத்தை நோக்கி விரைந்து செல்கிறார். இதை கண்ட தேவர்கள் அனைவரும் ஐயோ சனி இன்று யாரை பிடிக்க போகிறாரோ என்று அஞ்சி ஓட்டம் பிடிக்க ஆரமிக்கின்றனர்.
அவரவர் ஒரு இடத்திற்கு சென்று ஒளிந்துகொள்கின்றனர். ஆனால் சனிபகவானோ தேவலோகத்தை கடந்து செல்கிறார். இதை கண்ட தேவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.
சனி நேராக சிவபெருமானை அணுகி பரமேஸ்வரா.. தங்களை ஏழரை நிமிடம் பிடிக்க வந்திருக்கிறேன் என்றார். (நமக்கு ஒரு வருடம் என்பது தெய்வங்களுக்கு ஒரு நிமிடம்) அதனால்தான் நம்மை ஏழரை வருடங்கள் பிடிக்கும் சனிபகவான் கடவுளை ஏழரை நிமிடங்கள் பிடிக்கிறார்.
உடனே சிவபெருமான் உன்னையும், சர்வ உலகத்தையும் படைத்த என்னை நீ பிடிக்க முடியுமா? என்று கேட்டார். அதற்கு சனியோ எவரும் எனக்கு விதிவிலக்கல்ல” என்று சனி கூறினார்.
ஈசன் உடனே தப்பித்து பூமிக்கு வந்து, சனி கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஒரு பாதாள சுரங்கத்தின் அடியில் ஏழரை நிமிடம் ஒளிந்து கொள்கிறார்.
பிறகு வெளியே வந்து அவர், பார்த்தாயா...என்னை உன்னால் பிடிக்க முடியவில்லை என்கிறார்.
உடனே சனிபகவான், என்னையும், சர்வ உலகங்களையும் படைத்த நீர் எதற்காக கேவலம் பூமியில் ஒரு பாதாளத்தின் கீழ் ஒளிய வேண்டும்? அந்த ஏழரை நிமிடமே நான் உம்மைப் பிடித்தேன் என்று கூலாக கூறுகிறார்.
சனி கூறியதை கேட்டு வியந்த சிவபெருமான், இறைவன் என்றும் பாராமல் நீ உன் கடமையை சரிவர செய்ததால் ஈஸ்வரன் என்னும் என்னுடைய பெயரை உனக்கு பட்டமாக தருகிறேன்.
இன்று முதல் உன்னை எல்லோரும் சனீஸ்வரன் என்று அழைப்பர் என வாழ்த்துகிறார்.