Skip to main content

பல கதைகள் பேசும் கரவெட்டி மதவடி!

 

நண்பர் ஒருவர் இந்த மதவடியால் செல்லும்போது எமது நினைவு வந்ததாக கூறி கீழே உள்ள படத்தை அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றிகள்.

வடமராட்சியில் உள்ள மதவுக்கு எல்லாம் பொதுவாக ஒரு கதை இருக்கும். ஆனால் இந்த மதவுக்கு மட்டும் ஒரு வித்தியாசமான ஒரு கதை உண்டு.

மன்னாரில் இருந்தும்; மட்டக்களப்பில் இருந்தும் வந்தவர்கள் நெல்லியடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கி மதவடி என்ற ஒற்றை முகவரியோட வந்து சேர்ந்தனர்.

எந்த இயக்கத்தில் இருந்தாலும் ஒருமுறையாவது இந்த மதவடியில் வந்து குந்தி அரசியல் பேசாதவர்கள் இருக்க முடியாது.

புலிகளின் பொறுப்பாளராக சுக்ளா இருந்தபோது மதவடிகளில் இளைஞர்கள் இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்.

ஆனால் இந்த மதவடியில் மட்டும் இளைஞர்கள் தொடர்ந்து இருந்தனர். இதனால் ஒருநாள் திடீரென்று வந்து இருந்தவர்களை பிடித்துச் சென்றுவிட்டார் அவர்.

இரவு நேரம். இருந்தாலும் இதை அறிந்ததும் உடனே மக்கள் திரண்டு வந்து பிடிபட்ட இளைஞர்களை மீட்டு விட்டனர்.

அப்போது “ இவர்களால் மக்களுக்கு இடைஞ்சல் என முறைப்பாடு வந்துள்ளது” என்று சுக்ளா கூறினார்.

ஆனால் மக்களோ “ இவர்களால் எங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. இவர்கள் மதவடியில் இருப்பதுதான் எமக்கு பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறினார்கள்.

அதன்பின் சுக்ளா இந்த மதவடியில் இளைஞர்கள் இருப்பதை கண்டுகொள்ளவில்லை.

நான் அறிந்தவரையில் மதவடியில் இருந்த இளைஞர்களுக்காக மக்கள் திரண்டு சென்று மீட்டெடுத்தது பெருமை இந்த மதவடிக்கு மட்டுமே உண்டு.

இந்த மதவில் இருந்த சிலர் இன்று உயிருடன் இல்லை. ஆனால் இந்த மதவு இருக்கும்வரை அவர்கள் நினைவுகள் இருக்கும்

இந்த மதவுக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் எத்தனை அற்புதமான கதைகளை இது கூறும். ஆம் அத்துனை வரலாறு இதற்கு உண்டு அல்லவா.

இது மதவுதான். ஆனால் இதில் வெள்ளம் பாய நான் ஒருபோதும் காணவில்லை. ஆனால் இதன் ஓட்டைகளில் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் வைத்து எடுத்திருக்கிறோம்.

சிலவேளைகளில் சயிக்கிளை கூட அப்படியே விட்டிட்டு சென்றிருக்கிறோம். அடுத்த நாள் திரும்பிவரும்வரை அப்படியே இருக்கும். களவு என்பதே கிடையாது.

சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர்போல வருமா என்று இளையராசா பாடிய பாடல் கேட்கும்போதெல்லாம் இந்த மதவடிக்காக பாடியதுபோல் ஒரு உணர்வு வந்து செல்கிறது.

பாலன் அண்ணா

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ