Skip to main content

அது ஒரு கனாக் காலம்! கரவெட்டியில் ஒரு மதவு!



அது ஒரு கனாக் காலம்!

கரவெட்டியில் ஒரு மதவு இருந்தது
அது மதவடி என்று பெயர் பெற்று இருந்தது
அதில் நிறைய இளைஞர் கூட்டம் இருந்தது
அவர்கள் சிரித்து மகிழ்ந்திட்ட ஒரு காலம் இருந்தது

சோனப்பு வீதியில் அந்த மதவடி இருந்தது
மதவடியில் குந்தி இருந்து பேசிச் சிரித்திட
நண்பர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்து வந்ததே

ஒரு வீட்டில் விசேடம் என்றால்
பலகாரப் பெட்டி மதவடி வந்திடுமே
ஒரு வீட்டில் ஓலம் கேட்டால்
ஒடி வரப் பலர் இருந்தனரே மதவடியில்

அருகில் அத்துளு வயல் இருந்தது
அதன் நடுவே ஒரு குளம் இருந்தது
குளம் நிறைய தாமரை மலர்ந்தது
நீச்சல் பழகும் சிறுசுகளாலும்
குளம் கலங்கியும் நிரம்பியும் இருந்தது.

அங்கும் பல சாதிகள் இருந்தன
ஆனால் அதையும் தாண்டி அன்பு இருந்தது
பல மதங்கள் இருந்தன
ஒருபோதும் வேறுபாடு காட்டியதில்லை
பல இயக்கத்தையும் சேர்ந்தவர் இருந்தனர்
உன் இயக்கம் பெரிது என் இயக்கம் பெரிது
என்றதொரு சண்டை நடந்ததில்லையே

மதவடி அருகெங்கும் மதில்களும் வேலிகளும் இருந்தன
ஆனாலும் ஆர்மி வந்தால் ஓடி தப்பிச் செல்ல
அதில் இடைவெளிகளும் கண்டாயங்களும் இருந்தன

மட்டக்களப்பில் இருந்து வந்த பொடியன்களும்
மன்னாரில் இருந்து வந்த பொடியன்களும் 
கவலை எதுவுமின்றி குந்தி இருந்த மதவடி இது
எட்டுமுறை ராணுவம் சுற்றி வழைத்தபோதும்
ஒருமுறைகூட யாரும் பிடிபட்டதில்லையே

பொடியன்கள் தில்லையம்பலம் கோவிலடியில் 
பசியோடு நிற்கிறான்கள் என அறிந்ததும்
ஓடோடி வந்து புக்கையும் மோதகமும் தந்த ஜயர்
தலையில் துவக்கை வைத்து ஆர்மி மிரட்டிய போதும்
மதவடி பொடியன்களை காட்டிக் கொடுக்க மறுத்தாரே

யாரோ பெத்த பிள்ளைகள்தானே என்று இருந்துவிடாமல்
தான் பெத்த பிள்ளைகளாக எண்ணி சோறு சமைத்து
இராணுவ முற்றுகைக்குள்ளால தைரியமாக வந்து 
சோனப்பு சுடலையில் இருந்த பொடியன்களுக்கு தந்த
பாறி அக்காத்தையை மறந்தவிட முடியுமா?

மதவடி அருகில் ஒரு காளி கோவில் இருந்தது
அதில்  ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்
ஒருநாள் பூசாரியைக் கண்டதும் அவர்கள்
ஆயுதங்களை எடுக்க மறந்துவிட்டதை உணர்ந்தனர்

ஜயோ! பூசாரி ஏசப் போகிறரே என்று
மதவடியில் இருந்த பொடியன்கள் பயந்தவேளை
“அடேய் தம்பியளா! நீங்க வைத்த சாமான்களை
தண்ணி பட்டுவிடக் கூடாதென்று எடுத்து
காளிக்கு பின்னால வைத்திருக்கிறேன்டா” 
என்று சொல்லிவிட்டு போனாரே அந்த பூசாரி.
அது ஏதோ வானத்தில் இருந்து கேட்ட
அசரீரி போல் அல்லவா இருந்தது அவர்களுக்கு.

ஒருமுறை ராணுவம் தேடுதல் நடத்தியவேளை
பனம் பாத்தியினுள் மறைத்து வைத்திருந்த
30 பெட்டி சக்கையை (வெடி மருந்து)எடுத்து விட்டது
ஆத்திரம் கொண்ட ராணுவம் 
அங்கிருந்த கொட்டிலைக் கொழுத்தியது
அப்புறம் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றது

அந்த வீட்டில் மறைந்திருந்த பொடியன் 
அவசரத்தில் தன் வெடிகுண்டை மறந்து ஓடிவிட்டான்.
அந்த வீட்டில் இருந்த தாயோ உடனே
அந்த வெடி குண்டை வாழையடியில் புதைத்து விட்டு
அதன் மேலே அசையாமல் நின்றாள்
   
       
   
 
ராணுவத்தை கண்டு பெண்கள் பயந்த காலத்தில்
தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை 
வெடி குண்டை பாதுகாக்க வேண்டும் என்று
தைரியமாக நிமிர்ந்து நின்ற தாய் அவர்.

மதவடி பொடியன்கள் ஒன்றுகூடி 
கரவை இளைஞர் ஒன்றியம் என்னும் பெயரில்
வாசிகசாலை ஒன்றையும் நடத்தினார்கள்

அதில் கேடயம், மனஓசை, புதிய ஜனநாயகம், 
புதிய கலாச்சாரம் போன்ற புரட்சி சஞ்சிகைகளும்
இந்தியாவில் இருந்து தருவித்து வைத்தார்கள்.
இவற்றைப் படிப்பதற்கென்றே இளைஞர்கள்
பல ஊர்களில் இருந்தும் தேடி வந்தனர்.

ஒருமுறை இந்திய ராணுவம் இருந்தவேளை
ஊர்க் கோயில் திருவிழாவிற்காக 
சுவாமி வெளி வீதி உலா வந்தவேளை
இந்திய ராணவம் வருகின்றது என்றதும்
சுவாமியை அப்படியே வீதியில் போட்டுவிட்டு
காவி வந்த பக்தர்கள் ஓடி மறைந்து விட்டனர்.

 கடவுள் பிள்ளையார் கோவில் வீதியில் 
தனியாக கிடப்பதைக் கண்ட இந்திய ராணுவம்
பிள்ளையாரை தூக்கிச் சென்று 
கோவிலினுள் வைத்துவிட்டு சென்று விட்டனர்.

இதையறிந்த மதவடி பொடியன்கள் 
அடுத்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டினார்கள்
அதில்,
 “பக்தர்களே! 
பிள்ளையார் உங்களை காப்பாற்ற மாட்டார். 
போராளிகளே உங்களை காப்பாற்றுவர்” 
என்று எழுதியிருந்தார்கள்.

மதவடியில் போஸ்டரைக் கண்டதும்
ஊரே பர பரத்தது. 
சிலர் “பிள்ளையாரை எதிர்த்து போஸ்டரா” என்றார்கள்
பலர் “ போராளிகள்தானே எம்மைக் காக்கின்றனர்” என்றனர்.

   
       
   
  மதவடி  ஓட்டையில் எப்போதும் வெடி குண்டுகள் இருந்தன
எட்டு முறை  ராணுவம் அதன் மேலாக வந்தபோதும் 
ஒருபோதும் அதனை பொடியன்கள் வெடிக்க வைக்கவில்லை
ஊர் அழிந்துவிடும் என்று நினைத்தார்களா- அல்லது
தாம் இருந்து  மதகு என்று நினைத்தார்களா தெரியவில்லை

மதவடி இப்போதும் இருக்கிறது
அதில் இருந்த பொடியன்கள் சிலர்
இப்போது உயிரோடு இல்லை
உயிரோடு இருக்கும் சிலருக்கும்
அது ஒரு கனவாகி போனதன்றோ?

மதவடி எப்போதும் இருக்கும்
அதில் பொடியன்கள் எப்போதும் இருப்பர்?

தோழர் பாலன் அண்ணாவின் முகநூலில் இருந்து பெறப்பட்ட பதிவு

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ