ஒரு பெரிய அழிவு, இயற்கை சீற்றங்கள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது அது தொடர்பான தகவல்களை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர். இன்றைய காலத்தில் தான் கைக்குள் உலகத்தை அடக்கி விடலாமே… ஒரு நொடியில் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதை தவறாக பயன்படுத்துவதற்கு என்றே, ஒரு கூட்டம் இருக்கிறது. கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமான மலேசிய விமானம் பற்றி தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு நடுவே பீதியை கிளப்பும் விதத்தில் பொய்த் தகவல்களும் பரப்பப்படுகின்றன. ‘‘பெர்முடா முக்கோணப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்துகிடக்கிறது. எனினும் பயணிகள் பத்திரமாக உள்ளனர். இந்த வீடியோவைப் பாருங்கள்” என்ற பதிவை பேஸ்புக்கில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். வழக்கம்போன்று மால்வேர் எனப்படும் கணனிகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மென்பொருள்களை உருவாக்கிப் பரப்பும் ஹேக்கர்களின் வேலைதான் இது. அதுவும் இந்த வீடியோவை பிபிசி, சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறி அந்த வதந்தியின் ‘நம்பகத் தன்மையைக்’ கூட்ட ஹேக்கர்கள் முயல்கின்றனர். கூடவே, ‘Breaking News', 'Shocking Video' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வலைவிரிக்கின்றனர். இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றால் முதலில் அதைப் பகிர வேண்டும் என்றொரு நிபந்தனைக் கட்டளையையும் ஹேக்கர்கள் விதிக்கின்றனர். அத்துடன் அதைப் பார்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு நிபந்தனை, அதைப் பகிர்ந்தாலும் அதில் வீடியோ எதுவும் தெரிவதில்லை. இந்த விஷயத்தின் மறுபக்கத்தில் ஹேக்கர்கள் பெருமளவிலான பணத்தை அள்ளுகின்றனர். அதாவது குறிப்பிட்ட வீடியோவைப் பார்க்க வேண்டுமானால் உங்கள் சுயவிவரங்கள் வேண்டும், இது ஒரு கணக்கெடுப்பு, எனவே உங்கள் சுயவிவரங்களை சரிபார்க்க அனுமதி தரவும்” என்று விதிக்கப்படும் நிபந்தனைகளை நம்பி, வீடியோ பார்க்கும் ஆர்வத்தில் தகவல்களை அளித்தால் அவ்வளவுதான். ஹேக்கர்கள் உங்கள் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கறந்து விடுவார்கள். இந்தத் தகவல்களை வைத்துப் பெரிய அளவில் பணம் சம்பாதித்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மால்வேர் மென்பொருள் நிபுணர் கிறிஸ் பாய்டு எச்சரிக்கிறார். இதற்கு முன்பும் கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் தொடர்பாகவும் இதுபோன்ற வீடியோக்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.